search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brothers Dead"

    • இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ஸ்வார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழைக்கு அஜனாபுத்தூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த பப்பு குமார், சாஜன்குமார், ராஜேஸ்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை தெரியாது.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி 3 சகோதரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×