search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank worker Murdered"

    புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட வங்கி ஊழியர் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து, கடந்த 28-ந் தேதி காணவில்லை என்று அவரது மனைவி ராணி போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாரிமுத்து உடல் அழுகிய நிலையில் கோடியக்கரை கடல் பகுதியில் பிணமாக கிடந்தார்.

    இந்நிலையில் வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன், புதுக்கோட்டை டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் ரூ.4.84 கோடி மதிப்புள்ள 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்று கூறியிருந்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கையாடல் செய்து, கவரிங் நகைகளை வைத்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளதும், அந்த நகைகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் பாக்கெட்டை மட்டுமே சரி பார்த்து உள்ளதும் தெரிய வந்தது.

    இதனால் மாரிமுத்து செய்த மோசடி வங்கி அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக தெரியவில்லை. இந்நிலையில் மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனையில், அவரது கழுத்து எலும்பு, விலா எலும்பு ஆகியவை முறிந்த நிலையில் இருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் மணமேல்குடி, கோடியக்கரை உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார், வங்கியில் நகை வைத்திருந்த பெட்டகங்கள், அதன் சாவிகளின் பயன்பாடு குறித்து வங்கியின் கிளை மேலாளர், காசாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் நகைகள் மாயமானதாக வங்கி நிர்வாகம் புகார் கூறியுள்ளதால் அந்த ஆண்டு முதல் பணியாற்றியவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் வங்கி கிளை மேலாளர், காசாளர் ஆகியோரிடம் இருக்க வேண்டிய சாவிகள் மாரிமுத்து கைக்கு போனது எப்படி?, அதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இருப்பினும் இந்த சம்பவத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால் கொலையாளிகள் யாரென்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மாரிமுத்துவின் மனைவி ராணி, தனது கணவர் சாவில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதனிடையே நகைகள் கையாடல் செய்யப்பட்டதில் வங்கி அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நகை முறைகேடு சம்பவத்தை மூடி மறைக்க மர்மமான முறையில் மரண மடைந்த வங்கி ஊழியர் மாரிமுத்து மீது அனைத்து பழிகளையும் சுமத்தி, அவர் நகையை முறைகேடு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கை திசைமாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கி ஊழியர் மாரிமுத்து, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கையாடல் செய்த ரூ.5கோடி மதிப்பிலான நகைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதுக்கோட்டை போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    ×