search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby boy missing"

    தாயுடன் படுத்திருந்த ஆண் குழந்தை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரது மனைவி பிரியா (20).

    இவர்களுக்கு வெற்றி என்ற 4 வயது மகனும் பிரபாஸ் என்கிற 1½ வயது ஆண் குழந்தையும் உள்ளனர். முருகன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மகன்களுடன் ஊர் ஊராக சென்று பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அந்தந்த பகுதியில் உள்ள கடைகள் அருகே குழந்தைகளுடன் படுத்து தூங்குவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வியாபாரத்திற்காக புஞ்சை புளியம்பட்டி வந்தனர். அவர்கள் இரவு புளியம்பட்டி வார சந்தை பகுதியில் தங்கி வியாபாரம் செய்தனர். பிறகு அங்கே படுத்து தூங்கினர்.

    காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது அவர்கள் பக்கத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த பிரபாஸை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கம் தேடினர்.

    ஆனால் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து குழந்தையின் தாய் பிரியா புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்தார்.

    குழந்தை பிரபாஸ் இரவில் படுத்திருந்தபோது தவழ்ந்து எங்கேயாவது சென்று விட்டானா? அல்லது மர்ம ஆசாமிகள் யாராவது குழந்தையை கடத்தி சென்று விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×