search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumbakkam Bank Robbery Case"

    • இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும்.
    • குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள்.

    சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் வைத்து உருக்க முயற்சி நடந்திருப்பதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூடன் வேறு போலீசார் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?

    பதில்:- வேறு போலீசாருக்கு தொடர்பு இல்லை. அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும். அவர் போலீஸ்துறைக்கு தகவல் எதுவும் சொல்லாமல் திருட்டு நகைகளை வீட்டில் வைத்திருந்தது குற்றம் ஆகும். விசாரணையில் தகவல் தெரிந்தவுடன் தான் அமல்ராஜ் நகைகளை ஒப்படைத்தார்.

    கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஏற்கனவே இதற்கு முன்பு இது போன்ற கொள்ளை சம்பவங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறாரா?

    பதில்:- அவருடைய சர்வீஸ் ரெக்கார்டில் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவாகவில்லை.

    கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் எப்படி நகைகள் மீட்கப்பட்டது?

    பதில்:- சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் யார்-யாரிடம் பேசி இருந்தார். எங்கே சென்றிருந்தார் என்பதை ஆராய்ந்த போது, அச்சிரப்பாக்கம் சென்றிருப்பது தெரிய வந்தது. அவர் ஏன் சென்றார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்திய போது, அமல்ராஜின் மனைவியும், சந்தோஷின் மனைவியும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. எனவே அமல்ராஜை விசாரணைக்கு அழைத்தோம். அவர் நகையை ஒப்படைத்தார். பின்னர் அவரது உறவினர் வீட்டில் இருந்த மற்ற நகைகள் மீட்கப்பட்டது.

    கேள்வி:- ஸ்ரீவத்சவா எதற்கு கைது செய்யப்பட்டார்?

    பதில்:- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அப்படியே விற்க முடியாது என்பதால் மொத்தமாக உருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக எந்திரம் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்கள். அந்த எந்திரத்தை வாங்குவதற்கு ஸ்ரீவத்சவா உறுதுணையாக இருந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள். நகையை உருக்க தெரிந்த நபர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளனர். அவரை தேடி வருகிறோம். நகையை உருக்க தயாராக போது இது சின்ன எந்திரம், இவ்வளவு நகைகளை உருக்க முடியாது என்பதால் அவர்களால் உருக்க முடியவில்லை.

    இந்த நிலையில் எந்திரத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் லாட்ஜில் இருப்பவர்கள் சந்தேகம் அடைவார்கள் என்று எண்ணி அறையை காலி செய்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றுள்ளனர்.

    கவரிங் நகைகள் இருந்ததா...

    கேள்வி:- மீட்கப்பட்ட நகைகளில் கவரிங் நகைகள் ஏதேனும் இருந்ததா?

    பதில்:- வங்கி ஊழியர்களை வைத்து மீட்கப்பட்ட நகைகள் ஆராயப்பட்டது. அவர்கள் தங்களுடைய நிதி நிறுவனத்தில் கொள்ளை போன நகைகள் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

    கேள்வி:- இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கி இருப்பது, போலீஸ்துறைக்கு கரும்புள்ளியாக...

    பதில்:- சமூகம் என்பது எல்லோரும் சேர்ந்தது தான். இதில் போலீஸ்துறையை மட்டும் தனியாக பார்க்க முடியாது. தற்போது அவரை நாங்கள் விட்டிருந்தால்தான் கரும்புள்ளி என்று எடுத்துக்கொள்ள முடியும். இவ்வளவு பெரிய வழக்கை சீக்கிரம் முடித்திருக்கிறோம் என்பதை சாதனையாகதான் பார்க்க முடியும்.

    காரணம் என்ன?

    கேள்வி:- இந்த கொள்ளைக்கான காரணம் என்ன?

    பதில்:- இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தேவைக்காகவே இருந்த கொள்ளை நடந்துள்ளது. குற்றவாளிகள் முககவசம் அணிந்திருந்தாலும், அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம்.

    கேள்வி:- இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:- மேற்கொண்டு வேறு ஏதேனும் தகவல் வரும்பட்சத்தில் அதனடிப்படையில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.

    அலாரத்தை மேம்படுத்த அறிவுரை

    கேள்வி:- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மனைவி, இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விசாரணை நடைபெறுகிறதா?

    பதில்:- மேற்கொண்டு வரும் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முருகன் இந்த வங்கியில் வேலைபார்த்ததால் அலாரத்தை அணைத்து வைத்துள்ளார். அதனால்தான் வெளியே சப்தம் கேட்கவில்லை. கொள்ளை சம்பவம் நடந்து 20 நிமிடங்கள் கழித்து வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே சென்ற பிறகுதான் எங்களுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. எனவே வங்கி, நிதி நிறுவனங்கள் அலாரம் சிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் உள்பட போலீஸ்அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சென்னை வங்கியில் கொள்ளை போன நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.
    • கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று தெரிந்தும் மறைத்த குற்றத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

    சென்னை :

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் கடந்த 13-ந் தேதி கொள்ளை நடைபெற்றது.

    அன்று மதியம் 2 மணி அளவில் நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது,

    நிறுவனத்தின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் உள்ள பாதுகாப்பு அறையின் சாவியை வாங்கினர். பின்னர் ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்துவிட்டு பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில் கொள்ளை கும்பல் உடனடியாக அடையாளம் காணப்பட்டது.

    இந்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்து கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட சென்னை பாடி படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 29), அவரது கூட்டாளிகளான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பாலாஜி (28), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வ.உ.சி. தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (29), தியாகராயநகர் ஆர்.கே.புரம் எச்.பிளாக்கை சேர்ந்த செந்தில்குமரன் (38) ஆகியோர் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கினார். அவருடைய வீட்டில் இருந்து கொள்ளை போன நகைகளில் 3.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தியும், இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதி நிறுவனத்தில் கொள்ளை போன 31.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து நேற்று 2 கிலோ 656 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் எத்தனை கிலோ நகைகள் கொள்ளை போனது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் எத்தனை இடங்களில் இருந்து எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டன? என்ற அதிகாரபூர்வ தகவலை பட்டியலாக வெளியிட்டு குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பரபரப்பை எகிற வைத்த இந்த கொள்ளை வழக்கில் அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதையடுத்து, சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கொள்ளை வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை முதலில் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்டோம். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வங்கியில் வேலை பார்த்த முக்கிய குற்றவாளியான முருகன், அவரது நண்பர்கள் செந்தில், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தோம். இதில் முருகனும், சூர்யாவும் இந்த கொள்ளை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள்.

    மொத்தம் கொள்ளை போன நகைகளின் எடை 31.7 கிலோ ஆகும். இந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. இதில் கோவையை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவரையும் கைது செய்திருக்கிறோம். அவரும் சென்னை அழைத்து வரப்படுகிறார். இதில் சந்தோஷிடம் அதிகபட்சமாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பதில் குழப்பம் இருப்பதாக தகவல் வெளியானது.

    வாடிக்கையாளர் அடகு வைத்த நகைகளை கவருடன் எடை போட்டிருந்தோம். பின்னர் கவர் எடையை கழித்த போது 15 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. 2 கிலோ 100 கிராம் கவர் எடை இருந்ததால் தான் இந்த சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சிக்கிய சந்தோஷின் உறவினர் அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆவார். கொள்ளை நடந்த மறுநாள் சந்தோஷ் அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை பையில் வைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்தும் நகையை பறிமுதல் செய்தோம்.

    இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்க போகும் தகவல் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு தெரியவில்லை. கொள்ளையடித்துவிட்டு அவருடைய வீட்டுக்கு சென்றவுடன்தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவருடைய வீட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறது. அந்த தகவல் அவருக்கு தெரியும். எனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைந்திருந்தோம். அதன் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்போம்.

    சென்னை போலீஸ்துறை எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×