search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art Awards"

    • வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
    • கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுகள்

    தமிழக அரசு மாவட்டக் கலைமன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருது கள் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    விண்ணப்பம்

    எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதிகள்

    அதன்படி 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைவளர் மணி, 36 முதல் 50 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்குகலைச்சுடர்மணி, 51 முதல் 65 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைநன்மணி, 66 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைமுதுமணி ஆகிய விருது கள் வழங்கப்பட உள்ளன.

    வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை யும் வழங்கப்படும். ஏற்கனவே தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலைமன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது.

    கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய கலைஞர்கள் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    ×