search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anesthetic"

    • மாணவியை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகும். நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறேன்.

    காரமடை அருகே எனது உறவினர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் தான் நான் கல்லூரியில் தங்குவதற்கு பாதுகாவலராக இருந்து வருகிறார். என்னை ஊருக்கு அழைத்து செல்வது, திரும்ப கல்லூரியில் கொண்டு வந்து விடுவதும் அவர் தான்.

    எனது சொந்த ஊர் ஊட்டி என்பதால் அடிக்கடி அங்கு செல்ல முடியாது. இதனால் நான் காரமடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வார இறுதிநாட்களில் சென்று விடுவேன். அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்து விடுவேன்.

    எனது உறவினர் வீட்டில் அவருடன், அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரரும் இருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி நான் கல்லூரியில் இருந்து எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்தேன்.

    அன்று இரவு உறவினரின் மைத்துனர் கணேசன், குளிர்பானம் வாங்கி வந்து என்னை குடிக்குமாறு கூறினார். நான் செல்லும் நேரங்களில் எல்லாம் அவர் இதுபோன்று குளிர்பானம் வாங்கி தந்ததால் நானும் மறுப்பு தெரிவிக்காமல் அதனை வாங்கி குடித்தேன்.

    குடித்த சில நிமிடங்களில் எனக்கு சோர்வு ஏற்பட்டு என்ன நடப்பது என்றே தெரியாமல் மயங்கி விட்டேன். அந்த சமயம், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.மறுநாள் காலை எனது அறையில் இருந்து அவர் ஓடியதை பார்த்த நான், கண்விழித்த பின்பு இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் அதற்கு இதனை யாரிடமாவது தெரிவித்தால் என்னையும், என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நானும் பயந்து போய் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நான் எனது சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து எனது தாய் என்னை ஊட்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியான எனது தாய், என்னிடம் விசாரித்தார்.

    அப்போது நான் எனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் கூறி விட்டேன். அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து கோவைக்கு வந்து விட்டோம். தற்போது நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

    என்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    ×