என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK protest meeting"

    • திண்டுக்கல் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

    திண்டுக்கல்:

    தி.மு.க அரசின் பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது,

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் 525 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால் 18 மாத தி.மு.க ஆட்சியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பால் விலையை உயர்த்தவே மாட்டோம் எனக்கூறி லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    ரேசன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மண்எண்ணை என்ற பேச்சே தற்போது இல்லாமல் போய்விட்டது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக்கடிக்கும் நிலை உள்ளது. இதை அந்த துறையின் அமைச்சரிடம் கேட்டால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பாருங்கள் என்கிறார்.

    சொத்துவரியை 83 சதவீதம் வரை உயர்த்தி விட்டனர். அ.தி.மு.க ஆட்சியில் எந்த விலையும் உயர்த்தப்படாமல் கட்டுக்குள் இருந்தது. பிளாட்பாரங்களில் மக்களை பிச்சைஎடுக்கும் நிலைக்கு தி.மு.க அரசு தள்ளியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் முன்பு தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாததால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன.

    இதற்கு உரிய தீர்வை காணாமல் கவர்னர் மீது தி.மு.க குறைகூறி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில் தி.மு.க வினரின் தலையீடு அதிகரித்து வருகிறது.

    நாட்டில் இத்தனை பிரச்சினை உள்ளபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து வருகிறார். இதன்மூலம் தி.மு.கவில் வாரிசு அரசியல் மீண்டும் உறுதியாகி உள்ளது. காங்கிரசில் நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா, ராகுல் என தொடர்ந்து வாரிசுகளின் ஆதிக்கம் தொடர்ந்ததால் இன்று அந்த கட்சியே காணாமல் போய்விட்டது. அதேநிலைதான் தி.மு.கவுக்கும் ஏற்படும். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டங்கள் கைநழுவிபோய்வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் ரூ.1½ லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு பெற்றோம். ஆனால் தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு கூட நிதி ஒதுக்க முடியவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தும் சீரான குடிநீர் வினியோகம் கொடுக்க முடியவில்லை. அரசுஆஸ்பத்திரியில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.கவை பிளவுபடுத்த நினைத்தார். ஆனால் தற்போது பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கமே உள்ளனர்.இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கவே வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

    திண்டுக்கல்:

    பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. கடினமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவு வரிச்சுமையை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க முடியாத அளவிற்கு நெருக்கடியை தி.மு.க அரசு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகுபார்த்து வருகிறார். ஊேர பற்றி எரிந்தபோது ரோமாபுரி மன்னன் புல்லாங்குழல் வாசித்த கதைபோல்தான் இது உள்ளது. ஆளும்கட்சி என்பதால் தங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற மமதையில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை.

    7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை. திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகளே தற்போது உள்ளது. பல சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளபோதிலும் அதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அலுவலகங்களில் தி.மு.கவினரின் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.கவை புறக்கணிப்பார்கள். வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியதால் காங்கிரஸ் அழியும் நிலையில் உள்ளது. அதேநிலைதான் தி.மு.கவிற்கும் ஏற்படும். மீண்டும் தேர்தல் நடைபெறும் போது அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×