search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "addresses"

    உத்தரபிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். #NarendraModi #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீர், அங்குள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் மெகர் நகரில் உயிர்நீத்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட கபீரின் நினைவாக கோவில் ஒன்றை இந்துக்களும், நினைவிடம் ஒன்றை முஸ்லிம்களும் மெகர் நகரில் நிறுவியுள்ளனர்.

    இந்த நகர் முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கபீரின் போதனை விளக்க மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மெகர் நகருக்கு செல்கிறார். அங்கு கபீரின் நினைவிடம் மற்றும் தர்காவில் மரியாதை செலுத்தும் அவர், பின்னர் அங்கு ரூ.2½ கோடியில் கட்டப்படும் கபீர் அகாடமிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.



    மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் 2½ லட்சம் பேரை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதாவினர் கருதுகின்றனர். நெசவாளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், நெசவுத்தொழிலை செய்து வந்த கபீரின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக கூறும் அவர்கள், சுவாமி ராமானந்தாவின் சீடராக கபீர் கருதப்படுவதால், வைஷ்ணவ பக்தர்களின் ஆதரவையும் இதன் மூலம் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் நிலையில், பிரதமரின் மெகர் நகர பொதுக்கூட்டம் பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மெகர் நகருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் மெகர் நகர் முழுவதையும் சிறப்பு கமாண்டோ படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள இந்தியா-நேபாள எல்லைப்பகுதி மூடப்பட்டு உள்ளதுடன், உளவுத்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டால் கோரக்பூரில் இருந்து மெகருக்கு காரில் செல்ல நேரிடும். எனவே இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  #NarendraModi #UttarPradesh  #Tamilnews
    ஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். #PranabMukherjee #RSS
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஸ்தா முகர்ஜியும், தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அவருடைய பேச்சை மறந்து விடுவார்கள். ஆனால் அது தொடர்பான படக்காட்சிகள் நிலைத்து நின்றுவிடும்” என கூறினார்.



    இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொள்வதற்கு முன்பாக அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் பிறந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்றார்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி, “இந்திய தாய்நாட்டின் மாபெரும் மகனுக்கு எனது மதிப்பையும், அஞ்சலியையும் செலுத்துவதற்கு இங்கு இன்று வந்து உள்ளேன்” என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார்.

    பின்னர் பிரணாப் முகர்ஜி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது பாரத தேசத்தை பற்றி நான் புரிந்து கொண்ட விஷயங்கள், தேசியவாதம், தேசபக்தி ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

    பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.

    மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

    இந்தியாவை ஒரு மொழியாலோ, ஒரு மதத்தாலோ அடையாளப்படுத்திவிட முடியாது. 130 கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில் 122 மொழிகள் பேசப்படுகின்றன. 1,600 வட்டார மொழி பேச்சு வழக்குகள் உள்ளன. 7 பெரிய மதங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இருக்கிறார்கள். இங்கே யாரும் எதிரிகள் கிடையாது.

    நம்மை சுற்றிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். இதற்கு அவநம்பிக்கை, அச்ச உணர்வு போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    பெண்களும், குழந்தைகளும் பாலியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களுக்கு ஆளாகும் போது இந்தியாவின் ஆன்மா மிகுந்த காயத்துக்கு உள்ளாகிறது. ஜனநாயக நாட்டில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததை விவாதப்பொருளாக்கியது அர்த்தமில்லாதது என்றார்.

    மேலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் அடிப்படை அடையாளம் என்றும், நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்றும், யாரையும் வேற்றுமையுடன் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    விழாவில் கலந்து கொண்டதற்காக பிரணாப் முகர்ஜிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.  #PranabMukherjee #RSS
    ×