search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16 dead"

    இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடைமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
    சிம்லா:

    வடமாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் முகிற்பேழ் மழை எனப்படும் இடைவிடாத அடைமழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துக்களில் 16 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வானிலை மைய அறிக்கையின்படி, சஜன்பூர் திரா பகுதியில் ஒரே நாளில் 307 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1901ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் 277 மிமீ மழை பெய்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.

    இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மட்டும் 73.8 மிமீ மழை பெய்துள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 2011ல் ஆகஸ்ட் 13-ம் தேதி 75 மிமீ மழை பெய்திருந்தது.

    லகால், ஸ்பிட்டி மாவட்டங்கள் தவிர மற்ற 11 மாவட்டங்களிலும் இயல்பு நிலையை விட அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
    ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். #BaghdadBlast
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சதர் நகரில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று அதிகாலை திடீரென வெடித்துச் சிதறின. இதில், ஆயுதங்கள் வைத்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.

    இந்த விபத்தில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு 16 ஆக அதிகரித்தது. 32 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ஆயுதக் குழுவினர் தங்களுக்கு சொந்தமான கையெறி குண்டுகள், ராக்கெட் மூலம் ஏவப்படும் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை அதிக அளவில் சேமித்து வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு சக்திவாய்ந்த ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றன. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BaghdadBlast
    ×