search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 Arrest"

    மாங்காடு அருகே கத்திமுனையில் மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மாங்காட்டை அடுத்த கோவூரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இலங்கையைச் சேர்ந்த இவர் கோவூரில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவூரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்து வீடு வாங்குவது போல 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    நேற்று மதியம் 2 மணி அளவில் சுரேஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த இந்த கும்பல் வீட்டை விலை பேசியது. அப்போது திடீரென 10 பேரும் எழுந்து சுரேஷ்குமாரை மிரட்டி கைகளை பின்னால் கட்டினர். சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கட்டி கத்திமுனையில் காரில் கடத்தினர்.

    இதுபற்றி சுரேஷ்குமாரின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் படை முடுக்கி விடப்பட்டது. ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மகேஷ் தலைமையிலான 5 தனிப்படையினர் கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை மீட்க களம் இறங்கினர்.

    எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் பிரின்ஸ் ஆரோன், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ், சந்திரசேகர், ரவிக்குமார், சிதம்பர முருகேசன், முத்துராமலிங்கம் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடத்தல் கும்பல் சேலம் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    சுரேஷ்குமாரின் உறவினர் ஒருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் ரூ.5 கோடி வரையில் ஏமாற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்காகவே சுரேஷ்குமார் கடத்தப்பட்ட தும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் மற்றும் சிதம்பரத்தில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை இன்று அதிகாலையில் மீட்டனர். 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சுரேஷ்குமாரின் உறவினர் ரூ. 5 கோடியை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக கடத்தல் கும்பல் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

    மாங்காட்டை அடுத்த கோவூரில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டை எழுதி தருமாறும் கடத்தல் கும்பல் மிரட்டி வந்துள்ளது. இப்படி கடத்தல் கும்பல் தொடர்ந்து தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததால் சுரேஷ்குார் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்காக ஓ.எல்.எக்சில் விளம்பரம் செய்துள்ளார்.

    இந்த விளம்பரத்தை கடத்தல் கும்பல் பார்த்து விட்டது. தங்களுக்கு தெரியாமல் சுரேஷ்குமார் வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்ததை அறிந்தது. ஆத்திரம் அடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்குவது போல நடித்து சுரேஷ்குமாரின் வீட்டுக்கு வெளிஆட்களை அனுப்பி உள்ளனர்.

    பின்னர் குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி உள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

    கடத்தல் கும்பலிடமிருந்து 2 கார்கள், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    திருப்பதியில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் 14 வைர கற்களும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 501 ம் இருந்தன. அவர்களிடம் கேட்டபோது வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

    இதில் மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததால் அவர்களை விஜயநகரம் நிடமனூர், நாரயணனபுரம் காலணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 8 பேர் கொண்ட கும்பல் ஸ்கேனரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய 2 லேப்டாப், 2 கலர் பிரிண்டர்கள், 1 ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனந்தபூரை சேர்ந்த முகமத் காஜா இம்ரான் (27), முகமத் ஆலி (55), மோகன் (40), சரண்குமார் (23), நவநீத குமார் (27), விஜயவாடா பாலகுமார் (29), பவன்குமார் (23), விசாகப்பட்டினம் மங்குநாயுடு (37), அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் மோகன் (40), ஐதராபாத் நிஜாம்பேட்டை வர்மா (50), கிருஷ்ணா மாவட்டம் கனப்பவரம் முரளி கிருஷ்ணாரெட்டி என்பது தெரியவந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எவ்வளவு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திறமையாக விசாரணை நடத்தி கள்ள நோட்டு கும்பலை பிடித்த போலீசாரை திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வைர கற்கள் ரூ. 5.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    ×