என் மலர்
வழிபாடு

கார்த்திகை தீபத்திருவிழா- திருவண்ணாமலை கோவிலில் நாளை கொடியேற்றம்
- விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மன் மாட வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெறும்.
இதற்கிடையில் 7-ம் நாள் விழாவான 30-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 3-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெறும்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பகலில் அவ்வப்போது மிதமான மழை விட்டு, விட்டு பெய்தது. மேலும் சில சமயங்களில் வெயிலும் காணப்பட்டது. பக்தர்கள் எந்த சிரமமுமின்றி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் பொது தரிசனம் வழியில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.






