சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து நாளை விரதம் தொடங்குகிறார்கள்

அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து நாளை விரதம் தொடங்குகிறார்கள்
Published on

சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.

இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com