search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எதிர்கட்சியினர் சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றனர்- கவர்னர் தமிழிசை
    X

    எதிர்கட்சியினர் சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றனர்- கவர்னர் தமிழிசை

    • பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம்.
    • மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி கலந்துரையாடுதல் மற்றும் கானொளி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே சேலியமேடு கிராம பஞ்சாயத்தில் அரங்கனூர் சமூதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம். 'மோடி கேரண்டி வேன்' எல்லா கிராமங்களுக்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகிறது. பிரதமர் சொன்னது போன்று மூளை முடுக்குகளிலும் கூட மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. இது போன்ற பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் இன்னும் பல பயனாளிகளை கண்டறிவதற்கும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் "அம்மா இதற்கு முன்பு ஓலை வீட்டில் இருந்தேன். இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். அதற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தான் காரணம்" என்று கூறினார்.

    அதைப்போல இன்னும் தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் இது உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மழைக்கால காய்ச்சலை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவிலலை என்று குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் பேச வேண்டும்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் 30 சதவீதம் கமிஷன் வைக்கப்படுகிறது. ஊழல் மிகுந்த ஆட்சியாக இருக்கிறது. இதில் கவர்னருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும், இது சம்மந்தமாக ஜனாதிபதிக்கும் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனரே என்ற கேள்விக்கு, இது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    இதில் கவர்னருக்கு சம்மந்தம் இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டு சம்பந்தம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    Next Story
    ×