search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

    • கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
    • கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார். மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், வி.பி.ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.

    பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.

    காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதலமைச்சர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். இதனால் கவர்னர் தமிழிசை 2½ மணி நேரம் காத்திருந்தார். முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.

    Next Story
    ×