search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்ட அ.தி.மு.க.
    X

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்ட அ.தி.மு.க.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 23 பேர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் சமீபத்தில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. புதுவையில் 23 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம், அன்பழகன் உடையார், இளைஞர் பாசறை தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கட்சிகளுக்கு புதுவையில் வாக்கு சதவீதம் கிடையாது.

    பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதுவும் தற்போது கானல்நீராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கணிசமான சதவீத வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் புதுவை அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

    Next Story
    ×