என் மலர்
புதுச்சேரி

திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை- தமிழக முதலமைச்சருக்கு கவர்னர் தமிழிசை பதில்
- திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும்.
- 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் திராவிட மாடல் ஆட்சி மலரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் புதுவையில் பங்கேற்ற திருமண விழாவில் பேசினார்.
இது தொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம் தான் தற்போது தேவை.
புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிலத்தை முதலில் அவர் தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை.
புதுவையில் கவர்னரின் தலையீடு என குற்றம் சாட்டுகிறார்கள். ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட கவர்னரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் கவர்னர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது.
கர்நாடகத்தில்தான் முதல்-மந்திரி பொம்மை தலைமையில் ஆட்சி நடக்கிறது. புதுவையில் அல்ல. திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதுதான் திராவிட மாடலோ? 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






