என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவினாசி கோவில் சித்திரை திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி
    X
    அவினாசி கோவில் சித்திரை திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி

    அவினாசி கோவில் சித்திரை திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் தரிசனம்

    அவினாசி கோவில் சித்திரை திருவிழாவில் 16-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17-ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியதால் இந்த ஆண்டு கடந்த 5ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    நேற்று இரவு 9.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரிவரதராஜப்பெருமாள் கருடவாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதிவழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதிகளில் வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை திரளான பக்தர்கள் பார்வையிட்டனர். இன்று மாலை 4 மணிக்கு கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது.

    நாளை 11ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். 12ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து சிறிது தொலைவு இழுத்து நிறுத்தப்படுகிறது. பின்னர் 13ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து நிலை சேர்க்கப்படும். 14ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்துநிலை சேர்க்கப்படுகிறது. 15ந் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது. 16ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.
    Next Story
    ×