search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடி ஏற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடி ஏற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இன்று இரவு ஏழு மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

    முதல் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், காலை 5 மணிக்கு நடைதிறப்பும், 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தலும், பின்னர் கொடிப் பட்டம் தலைமைப் பதியை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து காவி உடை தரித்த அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே கொடியேற்றம் நடைபெற்றது. குரு.பால. ஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

    குரு. ராஜவேல், குரு. பால.லோகாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறைவான பக்தர்களுடன் எளிய முறையில் திருகொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதானமும் நடைபெற்றது.

    பள்ளியறை பணி விடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்து இருந்தனர். இரவு ஏழு மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் இரண்டாம் நாளான நாளை இரவு வைகுண்ட சாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் திருவிழாவில் அன்ன வாகன பவனியும், நான்காம் திருவிழாவில் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதலும், ஐந்தாம் நாள் பச்சை சாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருவதாலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்தில் பவனியும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகின்ற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவில் இரவு அனுமன் வாகன பவனியும், பத்தாம் திருவிழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற 30-ஆம் தேதி திங்கள் கிழமை 11-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் காலை மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும் நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எளிய முறையில் நடைபெறுகிறது.
    Next Story
    ×