என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய பவானி கூடுதுறை காவிரி ஆறு.
    X
    பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய பவானி கூடுதுறை காவிரி ஆறு.

    இன்று ஆடிப்பெருக்கு: புனித நீராட தடை விதிப்பால் பவானி கூடுதுறை வெறிச்சோடியது

    பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதேபோல் புதுமண தம்பதிகளும் பவானி கூடுதுறையில் காவிரி தாயை வணங்கி கல்யாணத்தன்று அணிவித்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். மேலும் தாலியும் மாற்றிக் கட்டுவார்கள்.

    பின்னர் புதுமணத் தம்பதிகள் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம்  ஆடிப்பெருக்கு விழா அன்று கோவில்களில் வழிபடவோ, நீர் நிலைகளில் நீராடவோ தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனையடுத்து இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஈரோடு மக்கள் தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக சென்னை, கோவையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடிப்பெருக்கு விழாவில் பொது மக்கள் கோவில்களில் சென்று வழிபடவோ, நீர் நிலைகளில் புனித நீராடவோ இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் கொடுமுடி, கொடிவேரி ஆகிய இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆற்றுக்கு செல்லும் வழிகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் சத்திய மங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் இன்று அந்தந்த கோவில் பூசாரிகளால் நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பவானிசாகர் அணையில் உள்ள பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பூங்காவிற்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பூங்காவை சுற்றி உள்ள 75 மீன் கடைகளும் இன்று முதல் 3 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×