search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் டபீர்படித்துறையில் பெண்கள் படையலிட்டு பூஜை செய்தனர்.
    X
    கும்பகோணம் டபீர்படித்துறையில் பெண்கள் படையலிட்டு பூஜை செய்தனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூரில் களை கட்டிய ஆடிப்பெருக்கு விழா

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

    காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

    தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.

    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப் பெண்கள், அங்குள்ள விநாயகருக்கு முன்பு தழை வாழையிட்டு அதில் எள், வெல்லம் கலந்த பச்சரிசி வாழைப் பழம், பேரிக்காய், விளாம்பழம் கொய்யாப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.

    மேலும் செந்நிறப் பனை ஓலையுடன் கருக மணி வளையல் சுற்றிய காதோலைக் கருகமணியுடன் மஞ்சள், குங்குமம், மஞ்சள் இழைக்கயிறுகள் ஆகியவற்றையும் வைத்து தீப, தூபங்கள் காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வெல்லங் கலந்த பச்சரிசி மற்றும் பேரிக்காய் முதலிய பழ வகைகளை அனைவருக்கும் வழங்கினர்.

    பெண்களுக்கு மஞ்சள் கயிறு அணிவித்த காட்சி.

    கன்னிப்பெண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்.

    மேலும் புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச் சியும், வளமும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

    இன்று அதிகாலை முதலே புஷ்ய படித்துறையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசார் பெண்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க கோரி ‘மைக்’கில் எச்சரிக்கை செய்த வண்ணம் செய்தனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா ‘களை’ கட்டியது. காவிரி கரையில் பூஜை செய்து விநாயகரை பெண்கள் வழிபட்டனர். காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி துலா கட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் படையிலிட்டு, ‘‘ பொங்கி வரும் காவிரியே... எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க செய்வாயாக’’ என்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    துலா கட்டத்தில் போலீசாரும், மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு பைபர் படகுகளில் சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.

    சீர்காழி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
    Next Story
    ×