என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் அதிகாரி தகவல்
    X

    ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் அதிகாரி தகவல்

    • துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு நாடுகளும் சம்மதம்.
    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றதாக அறிவித்திருந்தார்.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.

    போர் தொடங்கி 3 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் சண்டை நிறுத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை. இருநாட்டிற்கும் இடையில் சண்டையை நிறுத்த முயற்சிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா பரிந்துரை செய்தது. அத்துடன் ரஷியா மற்றும் உக்ரைனுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ரஷியா பரிந்துரைகளில் பல்வேறு மாற்றங்களை செய்ய நிபந்தனை விதித்தது.

    இதற்கிடையே சண்டை தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த வாரம் துருக்கியில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நேருக்நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. இருந்த போதிலும் சுமார் ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை இரு தரப்பிலும் இருந்து தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் முழுமையாக இந்த நடவடிக்கை முடியவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    ரஷியா உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றன என டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், உக்ரைன் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×