என் மலர்
உலகம்

ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோணி அல்பனீஸ்
- ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
- கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.
தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.
கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தோணி அல்பானீஸ் அமைச்சரானார். ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவர் கெவின் ரூட்டின் குறுகியபதவிக் காலத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்விக்குப் பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். பத்து ஆண்டுகால லிபரல்-தேசிய கூட்டணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 2022 இல் அவர் பிரதமரானார்.