என் மலர்
உலகம்

வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு இந்து படுகொலை
- வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- சமீபத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாசை ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
டாக்கா:
முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல், இந்துக்களின் தொழில்களைக் குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அங்கு தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.மேலும், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் இந்துக்களான ஜெயந்தி சங்கா, பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். இது இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ராஜ்பரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் என தெரிய வந்தது. அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என கூறினர்






