என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுரை.
    • எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது.

    தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    எரிமலையின் வெடிப்பினாலான சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் இல்லை என்று துணை தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிகோ இசோசாகி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதே நேரத்தில் இதனால் எழும் புகை சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது.

    இதனால், சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா நகரம் மற்றும் ஃபுருசாடோ நகரத்தின் குடியிருப்பு பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எரிமலை கண்காணிப்பு பிரிவின் சுயோஷி நகாட்சுஜி தெரிவித்தார்.

    • ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
    • அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தான் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதால் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

    அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

    மொத்தம் உள்ள 248 இடங்களில் 146 இடங்களுக்கு மேல் அந்த கூட்டணி கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.

    சில மணி நேரங்களில் அந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

    • கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார்.
    • ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார்.

    ஜப்பானின் கிழக்கு நகரமான நாராவில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேச தொடங்கியதும் அவர் சுடப்பட்டார். வீடியோ காட்சிகளில் ஷின்சோ அபேயின் பின்புறம் அப்பாவி போல நின்ற வாலிபர் துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது.

    அவரை பாதுகாப்பு வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். விசாரணையில் அவர் டெட்சுயா யமகாமி (வயது 41) ஜப்பான் கடல் சார் தற்காப்பு படை என்ற கடற்படை பிரிவில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன்விபரம் வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்துக்கு ஷின்சோ அபே கிழக்கு ஜப்பானின் நாரா நகருக்கு வர இருப்பது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கொலையாளி டெட்சுயா யமகாமி பார்த்துள்ளார்.

    அதில் ஷின்சோ அபே நாராவில் எங்கெங்கு பேசுகிறார் என்பதை கண்டுபிடித்த டெட்சுயா யமகாமி, அந்த பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளை குறிப்பெடுத்துள்ளார்.

    இதில் நாரா பகுதியில் நடக்கும் தெருமுனை கூட்டத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட கொலையாளி டெட்சுயா யமகாமி, அந்த பகுதியில் ஷின்சோ அபேயை சுட்டு கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அவரே வீட்டில் சுயமாக இரட்டை குழல் துப்பாக்கியை தயாரித்து உள்ளார். அந்த துப்பாக்கியை தனது சட்டையில் மறைத்து வைத்தபடி கூட்டத்துக்கு சென்றுள்ளார்

    கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார். 2 முறை சுட்டதில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

    ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. அவரை பாதுகாவலர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 100 யூனிட் ரத்தம் கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? என்பது பற்றி கொலையாளி டெட்சுயா யமகாமி கூறும்போது, ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.

    அவர் பலமுறை இதுபோன்ற தவறுகளை செய்திருந்தார். இதற்காக அவரை கொல்ல முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜப்பான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்.
    • அபேவுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அபேவுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் உடல் டோக்கியோவை வந்தடைந்துள்ளது.

    டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார். அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.





    • 2020ம் ஆண்டு உடல்நல குறைவை காரணம் காட்டி ஷின்ஜோ அபே பதவி விலகினார்.
    • ஜப்பான் பாராளுமன்ற மேல்சபைக்கு நாளை (10ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

    டோக்கியோ

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்ததுடன், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, அவர் உடல்நல குறைவை காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில், ஜப்பான் பாராளுமன்ற மேல்சபைக்கு நாளை (10ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது.

    அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

    ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் பைடன் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார்.

    ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் குவாட் சந்திப்புகளை பற்றிய, முன்னாள் பிரதமர் அபேவின் திறந்த மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த நீடித்த மரபு சார்ந்த பார்வையின் முக்கியத்துவம் பற்றியும் பைடன் குறிப்பிட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

    • ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    டோக்கியோ:

    ஜப்பானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

    இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் பியுமியா கிஷிடா கூறுகையில், ஷின்சோ அபேவை காப்பாற்ற டாக்டர்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அவர்மீது நடந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் காட்டுமிராண்டிதனமான செயல். ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் அடைந்தது கடும் வேதனை அளிக்கிறது. இந்தியா, ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஷின்சோ அபேவின் பங்கு அளப்பரியது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். ஜப்பான் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    எனது நண்பர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் குறித்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • ஜப்பானில் நீண்ட காலம் தலைமை பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே.

    டோக்கியோ:

    ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். 

    துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
    • ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஏராளமான பொதுமக்கள் இந்த பிரசார கூட்டத்துக்கு திரண்டு வந்து ஷின்சோ அபேயின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் ஷின்சோ அபேயை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டான். அந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதனால் ஷின்சோ அபே தனது நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே சரிந்தார்.

    உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை நோக்கி வேகமாக ஓடினார்கள். அதற்குள் அவர் கீழே விழுந்தார். அவரது மார்பு பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி சட்டை முழுவதும் ரத்தம் காணப்பட்டது.

    உடனே அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அவரை உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடனடியாக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் முதலில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது குண்டு பாய்ந்ததை அறிந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் யமாஹமி (வயது 41). அவன் அருகில் நின்றபடியே ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்டான்.

    இதற்காக அவன் சிறியரக கைத்துப்பாக்கியை பயன்படுத்தினான். யமஹாமி துப்பாக்கியால் சுட்டதை அங்கு நின்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் தான் பார்த்துள்ளார். அவர்தான் அவனை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

    ஷின்சோ அபேயை, யமாஹாமி எதற்காக சுட்டான்? அவன் எப்படி பொதுக்கூட்ட மேடை அருகே வந்தான் என்பது தொடர்பாக போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

    ஷின்சோ அபே சுடப்பட்ட தகவல் அறிந்ததும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷ்கிடாவும், மந்திரிகளும் டோக்கியோவுக்கு திரும்பியுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட சம்பவம் ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×