என் மலர்
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்.. 37 இந்திய கப்பல்கள், 1,109 மாலுமிகள் சிக்கித் தவிப்பு
- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயலும் எந்த கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.
- கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் ஜலசந்தி வழியாக, உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி நடைபெற்று வந்தது
தற்போது அந்த வழியை மூடியுள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயலும் எந்த கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் என எச்சரித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் இருந்து புறப்பட முடியாமல் எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன.
அதில் குறிப்பாக, இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்களுடன் அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.
இவற்றில் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல்களும் அடங்கும். பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.
இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.






