search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ஏன்?: பைடன் விளக்கம்
    X

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ஏன்?: பைடன் விளக்கம்

    • இரு நாடுகளும் ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன
    • நல்லுறவு வருவதை ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் கூறினார்

    சுமார் 75 வருடங்களுக்கு முன் தனி நாடாக உருவானது இஸ்ரேல். ஆனால் பல அரபு நாடுகள், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல் இருந்தன. அவற்றில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவில்லை.

    ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன. இந்த இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த போது, சவுதி அரேபியாவுடன் அமெரிக்க அதிபரின் தலைமையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 7 அன்று, இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.

    பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலையை சவுதி அரேபியா எடுத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மீண்டும் உறவு நலிவடைய தொடங்கி விட்டது.

    இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது:

    திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு காரணம், சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட கூடாது என ஹமாஸ் எண்ணியதுதான். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்கவும் முன் வந்தது. ஆனால் வரலாற்று சிறப்புமிக்க அத்தகைய நிகழ்வு நடந்து விட கூடாது என ஹமாஸ் விரும்புகிறது. இதனால் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இவ்வாறு பைடன் கூறினார்.

    Next Story
    ×