என் மலர்
உலகம்

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா - சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி
- சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
- இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.
இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.






