என் மலர்
உலகம்

பாகிஸ்தானை கழிவறை Tissue paper-ஐ போல் பயன்படுத்தி தூக்கியெறிந்துவிட்டது அமெரிக்கா - கவாஜா ஆசிப்
- ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு
- அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம்.
அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் கடந்த கால உறவை பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய ஆசிப், அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் டாய்லட் டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக சாடினார்.
முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்று விமர்சித்தார்.
இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என்றும் ஆசிப் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 6 அன்று, இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் பெஷாவரைச் சேர்ந்த யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போதே அமைச்சர் ஆசிப், அமெரிக்காவை விமர்சித்து பேசியுள்ளார். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்று கவாஜா ஆசிப் வலியுறுத்தினார்.






