என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கு ரூ.8.98 கோடி தங்க அட்டை விசா திட்டம் அறிமுகம்
    X

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கு ரூ.8.98 கோடி தங்க அட்டை விசா திட்டம் அறிமுகம்

    • பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
    • குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.

    பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.

    அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.

    ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.

    Next Story
    ×