search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினோவக் தடுப்பூசி
    X
    சினோவக் தடுப்பூசி

    சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - பரிசோதனையில் உறுதி

    சீன நிறுவனமான சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என 2 கட்ட பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.
    பீஜிங்:

    கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

    பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

    இந்த தடுப்பூசி சோதனையின் இறுதிகட்டமான 3-வது கட்டத்தில் பல தடுப்பூசிகள் உள்ளன. தற்போதைய நிலைப்படி, உலகம் முழுவதும் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிகட்ட கட்ட பரிசோதனையில் உள்ளன.
    அதில் 4 தடுப்பூசிகள் சீனாவை சேர்ந்தவை ஆகும்.   

    இந்நிலையில், சீனாவின் சினோவக் பயொடெக் என்ற மருத்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளது. 

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசால் அவசர பயன்பாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் சினோவக் தடுப்பூசியும் ஒன்று. 

    2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர்கள் வயது அடிப்படையில் இளையோர், நடுத்தர வயதினர், முதியோர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

    இந்த தடுப்பூசி சோதனையில் சினோவக் பயொடெக் நிறுவன ஊழியர்கள் குடும்பத்தினரும் 3 ஆயிரம் பேரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் இந்த இரண்டு கட்ட பரிசோதனையில் மொத்தம் எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற முழு விவரத்தை சீனா வெளியிடவில்லை.

    இந்த 2 கட்ட பரிசோதனையிலும் சினோவக் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. 

    முதியோர் என குறிப்பிடப்பட்டுள்ள 60 வயதுக்கு மேலானவர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்துள்ளது. 

    இந்த எதிர்ப்பு சக்தி இளையோர் மற்றும் நடுத்தர வயதினருடன் ஒப்பிடும்போது சற்று குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து சினோவக் தடுப்பூசி தற்போது இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையும் வெற்றிபெறும் பட்சத்தில் உலக அளவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய சினோவக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 3-ம் கட்ட பரிசோதனைகள் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×