search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய தலைவருடன் மீண்டும் சந்திப்பா? - டிரம்ப் பேட்டி
    X

    வடகொரிய தலைவருடன் மீண்டும் சந்திப்பா? - டிரம்ப் பேட்டி

    வடகொரியா தலைவருடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump
    வா‌ஷிங்டன்:

    உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.

    இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.

    இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

    இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த வடகொரியா, அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தது.

    இதனை கண்டிக்கும் விதமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.

    பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:-

    வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் 3-வது சந்திப்பு நடைபெறலாம். ஆனால் இது வேகமாக நடைபெறும் செயல்முறை இல்லை.

    படிப்படியாகத்தான் நடக்கும். கடந்த 2 சந்திப்புகளும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமாகவும் நடந்தன. கிம் ஜாங் அன் உடனான பொழுது ஆக்கப்பூர்வமாக கழிந்தது.

    நான், கிம் ஜாங் அன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதா என்றால், அதுவும் நடைபெறும் என்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் முன் ஜே இன் பேசுகையில், ‘‘டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த போர் பதற்றத்தை போதுமான அளவு தணித்துள்ளது. தற்போது அமைதி மேலோங்கி இருக்கிறது. எஞ்சி இருக்கும் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என நான் முழுமையாக நம்புகிறேன்’’ என்றார்.

    3-வது முறையாக சந்திப்பு நடக்கலாம் என டிரம்ப் கூறியிருப்பது குறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. #Trump

    Next Story
    ×