search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு
    X

    அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு

    பனிப்போரை வெளிப்படையான அரசியல் நிலைப்பாடாக மாற்றும் வகையில் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார். #Maduro #Venezuelaembassy #UnitedStates
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், நிகோலஸ் மடுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
     
    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மடுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மடுரோவுக்கு எதிராக, ராணுவத்தில் உள்ள ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

    மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    குறிப்பாக,  ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிகோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால், எனது பதவிக்காலம் 2025-ம் ஆண்டுவரை உள்ளது. அதற்குள் நான் பதவியை விட்டு இறங்க மாட்டேன் என நிகோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மடுரோவுக்கு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை கண்டு நிகோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன்விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.

    இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிகோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால், வெனிசுலா-அமெரிக்கா இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. #Maduro #Venezuelaembassy #UnitedStates
    Next Story
    ×