search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-20 மாநாட்டுக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் விமானத்தில் கோளாறு - அவசர தரையிறக்கம்
    X

    ஜி-20 மாநாட்டுக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் விமானத்தில் கோளாறு - அவசர தரையிறக்கம்

    அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் அவரது முதல்நாள் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. #Merkel #G20 #MerkelmissG20
    பெர்லின்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது  உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.

    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.



    நெதர்லாந்து நாட்டின்மீது நடு வானில் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காததால் விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாது என்று விமானி தீர்மானித்தார். இதைதொடர்ந்து, அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்கு  திரும்பிய விமானம் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறங்கியது.

    இதனால், ஜி-20 மாநாட்டின் முதல்நாள் கூட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது. நேற்றிரவு போன் நகரில் தங்கி ஓய்வெடுத்த அவர், வேறொரு பயணிகள் விமானம் மூலம் இன்று அர்ஜென்டினா சென்றடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    #Merkel #G20 #MerkelmissG20 
    Next Story
    ×