search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது
    X

    இந்தியா- வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

    வியட்நாம் வந்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.



    இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    இருநாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவும், வியட்நாமும் இனி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் இந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினர்.

    இன்றைய பேச்சுவார்த்தையின்போது தலையெடுத்து வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

    தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

    வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

    இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொகை 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit 
    Next Story
    ×