search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
    X

    பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?

    திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது. #Sridevi
    துபாய்:

    தமிழில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக மிளிர்ந்ததுடன் இந்தி திரைப்பட உலகில் நுழைந்து பாலிவுட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு பெண் குழந்தைகளுக்கு தாயான பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

    ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘மாம்’ ஆகிய படங்களில் வெகு பிரமாதமாக தனது குணசித்திர நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

    துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் உறவினர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள தனது அறை பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



    fainting spell எனப்படும் குறைந்த ரத்த அழுத்தத்தால், மூளைக்கு செல்லும் ரத்த சுழற்சியில் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

    உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக துபாயில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களும் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.

    தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காலல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால்தான் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? என்ற சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க அவர் தங்கி இருந்த ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருவதால் எந்த தகவல்களையும் வெளியிட முடியாது என அந்த ஓட்டலில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.
    #Sridevi #RIPSridevi #TamilNews
    Next Story
    ×