என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்: 2 நாடுகளுக்கு இடையேயான போராக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்- திருமாவளவன்
- தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது.
- இரண்டு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்.
ராணிப்பேட்டை:
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். முன்னதாக ராணிப்பேட்டையில் தனியார் விடுதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிற பதிலடி தாக்குதலை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேரணி அறிவித்துள்ளார். இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இருக்கிறோம். பயங்கரவாதம் துடைத்தெறியப்பட வேண்டும்.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தும் பேரணி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டும்தான். அ.தி.மு.க. கூட்டணி உறுதி பெறவில்லை. கூட்டணி அமைத்துக் கொண்டதாக சொன்னாலும் அது இன்னும் உறுதி பெறவில்லை.
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு பொதுமக்களின் பேராதரவும் வழக்கம் போல் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும் .
எல்லோரும் இந்தி படிப்பதற்கு ஏதுவாக அமையும் . ஆகவே உச்ச நீதிமன்றம் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார்கள். அப்படி ஆணையிட முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை உயர்த்தி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான். மண்ணின் மைந்தர்கள் தான். அவர்களுக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்புடையதல்ல.
இஸ்லாமியர்களும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை வரவேற்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது வேறு, 2 நாடுகளுக்கு இடையே போர் என்பது வேறு. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்.
2 நாடுகளுக்கு இடையேயான போராக இது மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ்கர்ணா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






