என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'பிச்சை குவளை பெரும் உண்டியலானது'... நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன்?
- பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது.
- தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் ஆற்றிய முதல் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கூறி தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். கடைசியில் தமிழில் முடித்தார். தமிழில் அவர் பேசியது தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன்,
``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பமும் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன். வணக்கம், அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு. சென்றும் வருவேன், நாளை எமதே. உங்கள் கமல்ஹாசன், ஜெய்ஹிந்த்" என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு,
'தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்' என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.






