என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு- சக மாணவர் ஆவேசம்
- 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
- இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர் தன்னை அவதூறாக பேசிய மாணவரை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்கச் சென்ற இன்னொரு மாணவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் 2 மாணவர்களுக்கும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரை பைக்குள் அரிவாளை மறைத்து கொண்டு வந்து சக மாணவர் வெட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






