என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல்லில் நடைபயிற்சி மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்த மாணவர்கள், பெண்கள்
- பெண்களிடம் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? என கேட்டறிந்தார்.
- துணை முதலமைச்சருடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். பின்னர் தனியார் விடுதியில் நேற்று தங்கினார்.
இன்று அதிகாலை ஆர்.எம்.காலனி, நேருஜிநகர், திருச்சி ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும் நடைபயிற்சி சென்றார். அப்போது சாலையில் சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவருக்கு வணக்கம் தெரிவித்ததுடன் உதயநிதி ஸ்டாலினுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த பெண்களிடம் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? என கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களிடமும் எந்த வகுப்பு படிக்கிறீர்கள்? என கேட்டறிந்து கவனமுடன் படிப்பில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை கூறினார். மேலும் அதிகாலையில் பணிக்கு சென்ற தூய்மை பணியாளர்களையும் வரவழைத்து அவர்களின் பெயர் விபரங்களை கேட்டறிந்து நலம் விசாரித்தார். துணை முதலமைச்சருடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.






