என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடியரசு தின விழா - ஆளுநர் தேநீர் விருந்து: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு!
- சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார்.
- உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார்.
குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி, வரவேற்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாக அழைப்பு அனுப்பி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார். வழிவழியாக பேணப்பட்டு வரும் நல் மரபுகளை உடைத்து களங்கப்படுத்துகிறார்.
சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து, இறுதியில் அவை காலவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகவும், ஒரு முகமாகவும் எதிர்த்து வருகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை, ஆளுநர் மாளிகை வழியாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நிர்ப்பந்தித்து வருகிறார்.
அறிவுசார் கருத்துக்களை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார். உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார். ஆளுநர் என்ற உயர்ந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமற்றவரான ஆர்.என்.ரவியின் அழைப்பையும், அவரது வரவேற்பு விழாவையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.






