என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறுகிறது-  திருவள்ளூர் மாவட்டத்துக்கு கூடுதல் எச்சரிக்கை
    X

    மோன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறுகிறது- திருவள்ளூர் மாவட்டத்துக்கு கூடுதல் எச்சரிக்கை

    • ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி புதிய காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் கடந்த 25-ந்தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த 'மோன்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'மோன்தா' புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக மாறுகிறது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்ட லம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணி யளவில் 'மோன்தா' புயலாக வலுவடைந்தது.

    இந்த 'மோன்தா' புயல் இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 560 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடா வில் இருந்து, தெற்கு-தென்கிழக்கு திசையில் 620 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 650 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இந்த 'மோன்தா' புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இந்த புயல் ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் தீவிர புயலாக மாறுகிறது. பின்னர் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அரு கில் தீவிர புயலாகவே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக இன்று முதல் வருகிற 2-ந்தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    'மோன்தா' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடா்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் ஆழ் கடலில் மீன்பிடிக்க சென்று உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    வங்கக்கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Next Story
    ×