என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தயார்- மேயர் பிரியா
    X

    தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தயார்- மேயர் பிரியா

    • சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்ப ணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஐ .டி.பி.ஐ. வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் பிடிப்பதற்காக கூடுதலாக 5 வாகனங்களும் குப்பை அள்ளுவதற்கும் 21 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 5 வாகனங்கள் நாய்கள் பிடிப்பதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    அதேபோல நாய்களுக்கு சிப் பொருத்தக்கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.

    மண்டலத்துக்கு ஒரு கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிய உள்ளது. பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகிறது. பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    ஓரிரு நாட்களில் எந்த பணிகளும் முடியாது. ஒரு 6 மாதம் காலம் எடுத்துக் கொள்ளப்படும். தெரு நாய்கள் கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும் போது நாய்கள் தொல்லை குறையும். 2022-ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதியில் மழை நீர்வாடிக்கால் வாய் பணிகள் முடிந்துள்ளது. தற்போது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள இடங்களில் மழைநீர் வடிகால் வாய் பணிகள் நடைபெற்றது.

    தற்போது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி ஜனவரிக்கு பிறகு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டலம் 5- 6 தூய்மை பணியாளர்கள் இப்போதும் பணியில் வந்து சேரலாம்.

    பணியாளர்கள் நிறைய நபர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. போதுமான அளவிற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். பணிகள் சீராக நடைபெற்று வருகிறது.

    கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×