என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனாதிபதியை மம்தா பானர்ஜி அவமதிப்பதை மன்னிக்க முடியாது - அன்புமணி #MamataBanerjee
- முதன்முறையாக பழங்குடியின சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
- அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மேற்கு வங்கத்தில் சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரு வகைகளில் திட்டமிட்டு அவமதித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்தியாவின் முதல் குடிமகளை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எந்த மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் சென்றாலும் அவரை அம்மாநில முதலமைச்சர் அல்லது முதலமைச்சரால் வர முடியாத சூழலில் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்க வேண்டும் என்பது தான் புரோட்டாகால் ஆகும். ஆனால், Bagdogra விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை அரசின் சார்பில் சிலிகுரி மேயர் மட்டும் தான் வரவேற்றுள்ளார்.
அதேபோல், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த சர்வதேச சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாடு கடைசி நேரத்தில் பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது. அங்கு சந்தாலி பழங்குடியினரால் வர முடியாது என்பதால் மாநாட்டிற்கு அதிகம் பேர் வரவில்லை, இரு நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்குடன் நடந்துள்ளன.
குடியரசுத் தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். அதிலும் குறிப்பாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியின சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக்கப்பட்டுள்ளார். அவரை அவமதிப்பது ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயலாகும்; இதை மன்னிக்க முடியாது. இதற்காக குடியரசுத் தலைவரிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






