என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
- பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.
இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் மா.சுப்ரமணியன் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்தனர்.
சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரித்து வந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
வேறு நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு ஜூன் 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






