என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 30 Nov 2024 2:39 PM IST

      ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரெயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

      வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் ரெயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • 30 Nov 2024 2:24 PM IST

      தொடர் மழையால் சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    • 30 Nov 2024 1:34 PM IST

      ஃபெஞ்சல் புயலினால் கனமழை பெய்து வருவதை ஒட்டி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • 30 Nov 2024 1:23 PM IST

      தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவ.30, டிச.1) ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    • 30 Nov 2024 1:20 PM IST

      ஃபெஞ்சல் புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

       

    • 30 Nov 2024 12:49 PM IST

      ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

       

    • 30 Nov 2024 12:48 PM IST

      செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில், 19 அடியை எட்டியது. காலை 449 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 4764 கன அடியாக உயர்ந்ததுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி நீரில், தற்போது 2368 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது.

       

    • 30 Nov 2024 12:45 PM IST

      மழை நீர் தேங்க தொடங்கியுள்ளதால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

       

    • 30 Nov 2024 12:44 PM IST

      ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

       

    • 30 Nov 2024 12:23 PM IST

      ஃபெஞ்சல் புயலினால் பெய்துவரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    Next Story
    ×