என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்
- வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.
- போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர்:
மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே, கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணன் வழக்கம் போல் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின் அவரை கடுமையாகக் கண்டித்துள்ளார். பின்னர் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவி கண்டித்துவிட்டுச் சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் பூச்சி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் வீட்டிற்குள்ளேயே கிடந்தது.
தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணன் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறு தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






