என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்- பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர்
- 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
- நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு 5-ம் கட்டமாக காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்து வைத்தார்.
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்டு கல்வி பயின்று வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.
நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு 5-ம் கட்டமாக காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.






