என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் 22-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு- துணை முதலமைச்சர் உரையாற்றுகிறார்
- இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
- கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது.
கோவை:
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரை எப்போதுமே கொங்குமண்டல தொகுதிகளின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த பல தேர்தல்களில் அ.தி.மு.க., கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றியை கொண்டே அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் மட்டும் இந்த சென்டிமெண்ட் பழிக்காமல் போனது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் கொங்கு மண்டல தலைநகராக விளங்கக் கூடிய கோவை மாவட்டத்தில் தி.மு.க.வால் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதன்காரணமாக இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் கட்சி மேலிடம் காய்நகர்த்தி வருகிறது.
இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.வும் தொகுதிகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஊர், ஊராக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தெருமுனை கூட்டங்கள் நடத்துதல் என பிரசாரங்களை தொடங்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்குமண்டல தி.மு.க. பொறுப்பாளராக செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளார். ஏற்கனவே கோவை மாவட்டத்தை ஒட்டிய பல்லடத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை பிரமாண்ட நடத்தி முடித்துள்ளார்.
அதற்கடுத்து கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டை கோவையில் நடத்த உள்ளது. ஒட்டுமொத்த கொங்கு மண்டல தொகுதிகளின் வெற்றியையும் குறிவைத்து இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தலைமை கழக அனுமதியுடன் தி.மு.க. இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை-வார்டு-பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும், தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள், 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சம் நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
22-ந்தேதி கோவையில் நடைபெற உள்ள மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டையும் கோவையில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அநேகமாக அந்த மாநாடு இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலே இருக்கலாம் என கூறப்படுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.






