என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூரில் நாளை தி.மு.க. முப்பெரும் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி பேசுகிறார்
    X

    கரூரில் நாளை தி.மு.க. முப்பெரும் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி பேசுகிறார்

    • விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    கரூர்:

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

    பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்தன. 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை காலை 10:30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×