என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகம் வருகிறார்
- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
- வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். லேசான தலைசுற்றல் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் கேட்டறிந்தார்.
அரசுப் பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை காணொலியில் திறந்து வைக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கு பின்பு அவர் தலைமைச் செயலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.






